நாகர்கோவில் அரசு ஆதி திராவிடர் மாணவியர் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் மாணவிகள் உணவு பாத்திரத்துடன் வந்து புதன்கிழமை புகார் தெரிவித்தனர்.
நாகர்கோவில் பால் பண்ணை சந்திப்பில் அரசு ஆதி திராவிட மாணவியர் விடுதி உள்ளது. இந்த விடுதியில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து 55 மாணவிகள் தங்கி பல்வேறு கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் தங்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக மாணவிகள் ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரேவை சந்தித்து புகார்
அளித்தனர். மனு விவரம்: மாணவியர் விடுதியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகள் தங்கி படித்து வருகின்றோம். மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவில் புழு, பூச்சி இருப்பதால் சாப்பிட முடியவில்லை. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதிகாரிகள் எங்களை அவதூறாக பேசுகின்றனர். விடுதியில் கழிவறை வசதி இல்லை. விடுதிக் கட்டடம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. ஆட்சியர் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவிகளை அவதூறாக பேசிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகார் மனுவில் 25 க்கும் மேற்பட்ட மாணவிகள் கையெழுத்திட்டுள்ளனர். மாணவிகள் ஆட்சியர் அலுவலகத்திற்கு உணவு பாத்திரத்துடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.