பேரிடர் காலங்களில் தங்களை பாதுகாக்க மீனவர்களுக்கு அதிநவீன செயற்கைகோள் கருவி வழங்க வேண்டும் என கன்னியாகுமரியில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் (சிஐடியூ) மாநிலக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்துக்கு, அமைப்பின் மாநிலத் தலைவர் செலஸ்டின் தலைமை வகித்தார். பொதுச்செயலர் அந்தோணி முன்னிலை வகித்தார். மாநிலச் செயலர் நித்யானந்தம், நிர்வாகிகள் லோகநாதன், சுப்பிரமணியம், மரியஜாண், கருணாமூர்த்தி, சிஐடியூ மாநில துணைப் பொதுச்செயலர் குமார் உள்ளிட்டோர் பேசினர்.
கூட்டத்தில், கடலில் மீன்பிடிப்பதில் வள்ளம், கட்டுமரம் மற்றும் விசைப்படகு மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இதுபோன்ற மோதல் நிகழாத வகையில் தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம், விதிகளை முறையாக அமல்படுத்துவதுடன், கடலில் மோதல் ஏற்படாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; இயற்கை சீற்றம், தேசப் பாதுகாப்பு போன்ற காரணங்களால் மீன்பிடித் தொழிலை அரசு தடைசெய்யும் காலங்களில் மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்;
புயல், பேரலை, மழை போன்ற இயற்கை பேரிடரிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள அதிநவீன செயற்கைகோள் இணைப்புடன் கூடிய தொலைத்தொடர்பு கருவிகள் மீனவர்களுக்கு வழங்க வேண்டும்; உள்நாட்டு மீனவர்கள் பெரிதும் நம்பியிருக்கும் குளம், ஆறு, ஏரி போன்றவைகளில் மீன்பிடிக்கும் உரிமத்தை பொது ஏலம் மூலம் தனியாருக்கு அளிப்பதால் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, உள்நாட்டு மீனவர்களின் நலனைக் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.