குலசேகரத்தில் ரப்பர் பால்வடிப்புத் தொழிலாளர்களுக்கான 3 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.
தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் இயங்கும் ரப்பர் திறன் மேம்பாட்டு கவுன்சிலும், ரப்பர் வாரியமும் இணைந்து, ரப்பர் தோட்டத் துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் அதிக ரப்பர் உற்பத்தியை பெறும் வகையில் திறன் மேம்பாட்டு முகாமை நடத்தி வருகின்றன.
அதன்படி, குலசேகரம் அருகேயுள்ள அண்டூர் ரப்பர் உற்பத்தியாளர் சங்கத்தில் இணைந்துள்ள புத்தன்கடை தீபம் மகளிர் சுய உதவிக்குழு பால்வடிப்புத் தொழிலாளர்களுக்கு 3 நாள்கள் நடைபெற்ற பயிற்சிக்கு அண்டூர் ரப்பர் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் பி.எஸ். பிரதீப் குமார் தலைமை வகித்தார். ரப்பர் வாரிய உறுப்பினர் வினோத் குமார் முகாமைத் தொடங்கி வைத்தார். ரப்பர் வாரிய துணை ரப்பர் உற்பத்தி ஆணையாளர் (பொறுப்பு) உஷா தேவி பிரதம மந்திரி திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார். துணை வளர்ச்சி அலுவலர் கே. முரளி தொழில்நுட்ப வகுப்புகள் நடத்தினார். ஆரோக்கிய லிவிங்ஸ்டன் செய்முறைப் பயிற்சி அளித்தார். முடிவில் சான்றிதழும் உதவித் தொகையும் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் தொழில் நுட்பம், செய்முறை, திறன் மேம்பாடு மதிப்பீடு ஆகியவற்றை தொழிலாளர்கள் கண்டுணர்ந்தனர்.