தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் சில்லறை வணிகத்தை பாதுகாக்க வலியுறுத்தி நடைபெறும் சுதேசி எழுச்சிப் பயணத்துக்கு களியக்காவிளையில் வணிகர்கள் சார்பில் செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
சில்லறை வணிகத்தை பாதுகாக்க வேண்டும், ஆன்லைன் வர்த்தகத்தை தவிர்க்க வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களை புறக்கணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மலைக்கோட்டையில் நடைபெறும் சுதேசி பிரகடனம் நிகழ்ச்சிக்கு, கன்னியாகுமரி உள்பட தமிழகத்தின் 25 நகரங்களிலிருந்து சுதேசி எழுச்சிப் பயணம் நடைபெறுகிறது.
இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள் கலந்து கொள்கிறார்கள். இதன் ஒரு பகுதியாக களியக்காவிளையில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு களியக்காவிளை வியாபாரிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் எப். பிராங்கிளின் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஸ்ரீனிவாசன், செயலர் சுனில், துணைச் செயலர் ராஜன், பொருளாளர் வினுகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அமைப்பின் ஆலோசகர் குழிவிளை விஜயகுமார் நன்றி கூறினார்.
தொடர்ந்து கோரிக்கைகளை விளக்கி அமைப்பின் மாவட்டத் தலைவர் எல்.எம். டேவிட்சன், மாநில துணைத் தலைவர் கருங்கல் ஆர். ஜார்ஜ் ஆகியோர் பேசினர்.