நாகர்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு விழாவினை ரயில்வே போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு ஒலிம்பிக் தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார்.
பள்ளித் தாளாளர் சனில் ஜான் பந்திசிறக்கல் தலைமை வகித்தார். பள்ளி மாணவர், மாணவிகள் பச்சை, சிவப்பு, நீலம், மஞ்சள் என 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். கால்பந்து, கைப்பந்து, வடமிழுத்தல் போன்ற குழு விளையாட்டுகளும், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போன்ற தனிநபர் தடகளப் போட்டிகளும் நடைபெற்றன.
விழாவை தொடங்கி வைத்த டிஜிபி சைலேந்திரபாபு பேசியது; வாழ்வில் வெற்றி பெறுவதற்கு கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் கூடுதல் ஆர்வம் தேவை என்றார் அவர். தொடர்ந்து அவர் பள்ளி மாணவர், மாணவிகளிடம் கலந்துரையாடினார். பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
விழாவில் தக்கலை மறைமாவட்ட குருகுல முதல்வர் தாமஸ் பெளவத்துப்பறம்பில், அல்போன்சா பள்ளி முதல்வர் லிஸ்பெத், துணை முதல்வர்கள் அஜின்ஜோஸ், பிரேம்கலா, பெற்றோர்ஆசிரியர் கழகத்தலைவர் சேவியர்சந்திரபோஸ், கல்வி ஒருங்கிணைப்பாளர் ராஜையன் மற்றும் தலைமையாசிரியை மோனிக்காஸ்பினோலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஏற்பாடுகளை பள்ளி உடல்கல்வி ஆசிரியர்கள் தங்கதுரை, ரமேஷ்ராஜ் ஷேம்லின்ஷீபா ஆகியோர் செய்திருந்தனர்.