நாகர்கோவிலில் இருந்து கேரள மாநிலத்துக்கு ரயில் மூலம் கடத்தப்பட்ட 1 டன் ரேஷன் அரிசியை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு அதிக அளவில் ரேஷன்அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுப்பதற்காக பறக்கும் படை அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பறக்கும் படை வட்டாட்சியர் சதானந்தனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையிலான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை நாகர்கோவில் ரயில் நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் ஒரு பெட்டியில் இருக்கைகளின் அடிப்பகுதியில் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் மொத்தம் 1 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் கோணம் அரசு கிடங்கில் அரிசியை ஒப்படைத்தனர். மேலும் இந்த கடத்தலில் ஈடுபட்டது யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.