திருவட்டாறு அருகே ரப்பர் கடையில் புகுந்து ரூ. 1 லட்சம் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருவரம்பு பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் (42). அப்பகுதியில் ரப்பர் கடை நடத்தி வருகிறார். இவர் வியாழக்கிழமை மதியம், கடையின் ஷட்டரை பாதி மூடி வைத்துவிட்டு மதிய உணவுக்காக வீட்டுக்கு சென்றார். பின்னர் கடைக்குத் திரும்பியபோது, மேசை திறந்து கிடந்துள்ளது. அதில் வைக்கப்பட்டிருந்த ரூ. 1 லட்சம் பணம் திருடப்பட்டிருந்தது. இது குறித்து திருவட்டாறு காவல் நிலையத்தில் அன்பழகன் கொடுத்த புகாரையடுத்து போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
ஹோட்டலில் திருட்டு: களியல் அருகே சிற்றாறு அணையின் கரைப் பகுதியான சங்கரன்கடவு என்ற இடத்தில் ஹோட்டல் நடத்தி வருபவர் வல்சலம். இவர் தனது ஹோட்டலை வியாழக்கிழமை இரவு வழக்கம் போல் மூடி விட்டுச் சென்றார். வெள்ளிக்கிழமை காலையில் ஹோட்டலைத் திறந்த போது மேசையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 3 ஆயிரம் மற்றும் குளிர்பானங்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக கடையாலுமூடு காவல் நிலையத்தில் வல்சலம் கொடுத்த புகாரையடுத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.