பத்மநாபபுரம் பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
பத்மநாபபுரம் ஸ்ரீ பெருமாள் கோயிலில், கிருஷ்ணஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறார்கள் கிருஷ்ணர் போன்று பல்வேறு வேடமணிந்து நான்கு ரத வீதிகளில் வெள்ளிக்கிழமை வலம் வந்தனர்.
கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 6 மணிக்கு நவகாபிஷேகம், உஷபூஜை, தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. 7 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாமம், கோ பூஜை, தீபாராதனை பாகவத பாராயணம் , தீபாராதனையும், தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 4.40 மணிக்கு ரக்ஷாபந்தன் விழா ஆகியவை நடைபெற்றன. மாலை 5 மணிக்கு சிறார்கள் கிருஷ்ணர், ராதை உள்பட பல்வேறு வேடமணிந்து நான்கு ரத வீதிகளையும் சுற்றிவந்து பெருமாள் கோயிலை வந்தடைந்தனர். மாலை 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலில்... தக்கலை அருகே கொல்லன்விளை ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலில் 27-ஆவது கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் மலர் முழுக்கு விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இத்திருவிழா செப்.1 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
விழாவின் தொடக்கமாக வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை அகண்ட நாம ஜெபமும் , திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சிக்கு கிருஷ்ண வக சமுதாயப் பேரவைத் தலைவர் கே.சோமசேகரன்பிள்ளை தலைமை வகித்தார்.
விளக்கு பூஜையில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகளை சொர்ணாகரன்பிள்ளை, மேலாண்மை இயக்குநர் கோலப்பபிள்ளை, துணைத் தலைவர் ஈஸ்வரபிள்ளை, பொதுச் செயலர் ஹரீஸ், முன்னாள் நிர்வாக இயக்குநர் ஈஸ்வரபிள்ளை, இளைஞர் முன்னேற்ற சங்கத்தலைவர் பத்மகுமார், துணைத் தலைவர் வேலுப்பிள்ளை, சட்ட ஆலோசகர் மோகனன், செயலர்கள் வேலுப்பிள்ளை, கிருஷ்ணகுமார், இணை செயலர் குமாரசுவாமிபிள்ளை, ஆலய நிர்வாக குழு உறுப்பினர் தாணுபிள்ளை ஆகியோர் வழங்கினர். ஆலயநிர்வாக குழுச் செயலர் வே. ஜெயகுமார் நன்றி கூறினார்.
இரவு 8 மணிக்கு திருவாசக சபை சார்பில் நடைபெற்ற பகவத் கீதா பாராயணம் நிகழ்ச்சிக்கு பின்னர் ஸ்ரீ கிருஷ்ணன் பிறப்பு, மழலை கண்ணன் தொட்டில் தாலாட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் திரளான பெண்கள் பங்கேற்றனர். ஆக. 27 ஆம் தேதி சுமங்கலி பூஜை, 30 ஆம் தேதி மாலை 4 மணி முதல் 6 மணிவரை மனைவி நல வேட்பு நாள், செப்.1 ஆம் தேதி மலர் முழுக்கு விழா ஆகியவை நடைபெறுகிறது.