குமரி மாவட்டத்தில் உள்நாட்டு மீனவர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு மீன்பாசிக் குத்தகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகர்கோவிலில் தர்னா போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கம் சார்பில், நாகர்கோவில் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த தர்னாவுக்கு, உள்நாட்டு மீனவர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் ஜோணி தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், "உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் உள்நாட்டு மீனவர் கூட்டுறவுச் சங்கங்களை அழிக்கும் விதமாக வரையறுக்கப்பட்டுள்ள அரசாணை நிலை எண் 16 மற்றும் 72 ஐ ரத்து செய்ய வேண்டும்; மீன்துறை பரிந்துரையின் பேரில், வருவாய்த் துறையினர் உள்நாட்டு மீனவர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு கொடுத்து வந்த மீன்பாசி குத்தகையை கடந்த காலங்களை போல் வழங்க வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
முன்னாள் எம்.பி. ஏ.வி.பெல்லார்மின், தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்புத் தலைவர் ஜி.செலஸ்டின், மீன் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கே.அலெக்சாண்டர், பொதுச்செயலர் எஸ்.அந்தோணி, ஜெயசீலன், பி.இசக்கிமுத்து, ராஜ், தாசன், தாமஸ், ஆல்பின், மரிய ஜார்ஜ், ராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் ஆர்.செல்லசுவாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
இதில், ஜேசுராஜன், வி ஆறுமுகம், ஷாஜின், பரதேசி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.