கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை (பிப்.16) மின் கட்டண மையம் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் நாகர்கோவில் மேற்பார்வை பொறியாளர் எ.டேவிட் ஜெபசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கன்னியாகுமரி மின்பகிர்மான வட்டத்தில் உள்ள அனைத்து மின்விநியோகப் பிரிவுகளிலும் கணினி மென்பொருள் இடம் பெயர்வு (Server Migration) நடைபெற இருப்பதால் சனிக்கிழமை (பிப்.16) மின் கட்டண வசூல் மையங்கள் செயல்படாது. பிப். 15 ஆம் தேதி மாலை 4 மணி முதல் 18 ஆம் தேதி காலை 8 மணி வரை இணையதளம் மூலமாகவும் மின் கட்டணம் செலுத்த முடியாது.
மேலும் பிப். 16 ஆம் தேதி அன்று மின்கட்டணம் செலுத்த வேண்டிய கடைசிநாளாக இருந்தால், அன்றைய தினம் மின்கட்டணம் செலுத்த வேண்டிய மின் நுகர்வோருக்கு பிப். 18 ஆம் தேதியன்று மின் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாளாக நீட்டிப்பு செய்து கொடுக்கப்படும். மேலும் பிப். 18 ஆம் தேதி காலை 8 மணி முதல் மின் கட்டண வசூல் மையங்கள் மற்றும் இணையதளங்களில் வழக்கம் போல் மின் கட்டணம் செலுத்தலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.