வருகிற மக்களவைத் தேர்தலுக்கு முன், குமரி மாவட்டத்தில் அனைத்து வளர்ச்சி திட்டப் பணிகளையும் நிறைவேற்ற வேண்டும் என அனைத்துத் துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே அறிவுறுத்தினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை வகித்து, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றம் குறித்து அந்தந்த துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்ட வளர்ச்சிப் பணிகளின் நிலைமை குறித்து தனித்தனியே கேட்டறிந்து, அவற்றை செயல்படுத்துவதில் உள்ள இடையூறுகளை களைவதற்கான ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து, வளர்ச்சிப் பணிகள் துரிதமாக நடைபெறவும், நிலுவையிலுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை வருகிற மக்களவைத் தேர்தலுக்கு முன்பு முடிக்க வேண்டும் எனவும் அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ரேவதி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ராஹுல்நாத், சார் ஆட்சியர்கள் பவன்குமார்.க. கிரியப்பனவர் (நாகர்கோவில்), ஷரண்யா அரி (பத்மநாபபுரம்), உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரதிக் தயாள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ம.சுகன்யா, தேசிய நெடுஞ்சாலைத்துறை மேலாளர் பிரதீப், பொதுப்பணித் துறை, குடிநீர் வடிகால் துறை, ஊராட்சி, பேரூராட்சி மற்றும் அனைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.