விளவங்கோடு வட்டம், அருமனை அருகேயுள்ள முக்கூட்டுக்கல் ரேஷன் கடையில் பொருள்கள் வழங்குவதில் குளறுபடி நிலவுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
முக்கூட்டுக்கல் ரேஷன் கடையில் 800 -க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பொருள்கள் வாங்கி வருகிறார்கள். இந்தக் கடை வழக்கமான வேலை நேரத்துக்கு திறக்காமல் பல மணி நேரம் தாமதமாக திறக்கப்பட்டு வருகிறதாம். மேலும், பெரும்பாலான ஞாயிற்றுக்கிழமைகளில் கடை திறக்கப்படுவதில்லையாம்.
இதனிடையே, பொருள்கள் வாங்கச் செல்லும் பெண்களிடம் அவமரியாதையாக பேசுவதாகவும், எடை குறைவாக பொருள்கள் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, பொங்கல் பண்டிகையையொட்டி கரும்புடன் கூடிய பொங்கல் பரிசுப் பொருள்கள் மற்றும் வேட்டி, சேலைகள் வழங்கியதிலும் குடும்ப அட்டைதாரர்களிடம் பாகுபாடு காட்டப்பட்டுள்ளதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, கடை ஊழியர் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, இடமாற்றம் செய்வதுடன், பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் ரேஷன் பொருள்கள் வழங்க வேண்டும் என இப்பகுதி மக்கள் சார்பில் மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.