கன்னியாகுமரியை அடுத்த ஆரோக்கியபுரத்தில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் கூட்டப்புளிக்கு ஞாயிற்றுக்கிழமை பாய்மரப் படகுப் போட்டி நடைபெற்றது.
கூட்டப்புளி புனித சூசையப்பர் ஆலயத் திருவிழா கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
11 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவின் 3ஆம் நாளையொட்டி பாய்மரப் படகுப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கூட்டப்புளியைச் சேர்ந்த 9 படகுகள் பங்கேற்றன.
போட்டி தொடக்க நிகழ்வுக்கு கூட்டப்புளி பங்குத்தந்தை ரஞ்சித்குமார் கர்டோசா தலைமை வகித்தார். போட்டியை ஆரோக்கியபுரம் பங்குத்தந்தை டென்ஸ்டன் தொடங்கிவைத்தார்.
ஆரோக்கியபுரத்தில் இருந்து இடிந்தகரை சென்ற படகுகள் அங்கிருந்து கூட்டப்புளி கரையை அடைந்தன.
இப்போட்டியில் முதல்பரிசு பெற்ற பீட்டருக்கு ரூ. 50 ஆயிரம், இரண்டாம் பரிசு பெற்ற சேவியருக்கு ரூ. 30 ஆயிரம், மூன்றாம் பரிசு பெற்ற மைக்கேலுக்கு ரூ. 20 ஆயிரம் பரிசுகளாக வழங்கப்பட்டன.
திருவிழாவின் 9 மற்றும் 10-ஆம் நாள் திருவிழாவன்று தேர் பவனி நடைபெறும். 11 ஆம் நாளான மார்ச் 4-ஆம் தேதி திருக்கொடியிறக்கம் நடைபெறும்.