குமரி மாவட்டத்தில் "பிரதம மந்திரி கிசான் சம்மான்' நிதி திட்டத்தின்கீழ், 80 ஆயிரம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்றார் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே.
குமரி மாவட்டம், திருப்பதிசாரம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற ரபி முன்பருவ விழிப்புணர்வு முகாமில், மாவட்ட ஆட்சியர் 87 விவசாயிகளுக்கு முதல் தவணையாக ரூ. 2 ஆயிரத்தை வழங்கிப் பேசியதாவது:
"பிரதம மந்திரி கிசான் சம்மான்' நிதி திட்டத்தின்கீழ், சிறு குறு விவசாயிகளின் வருமானத்தை உயர்த்திட, ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் முதல் தவணையாக ரூ. 2 ஆயிரம் வீதம் 87 விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இத்திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி கோரக்பூரில் தொடங்கிவைத்தார்.
இத்திட்டத்தில் வழங்கப்படும் தொகையானது விவசாயிகளின் கடன் தொகையிலிருந்து பிடித்தம் செய்யப்படுவதில்லை. இத்திட்டத்தில் பயனடைந்த விவசாயிகள், நமது மாவட்டத்தில் இத்திட்டத்தை அறியாத சிறு குறு விவசாயிகளிடம் எடுத்துரைத்து பயன்பெற உதவிட வேண்டும். இத்திட்டத்தில் நமது மாவட்டதில் 80 ஆயிரம் பேர் பயனடைகின்றனர். மேலும் இதில் விடுபட்டவர்கள் தங்கள் பெயர்களை வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத் துறை மூலம் நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து பயன்பெற வேண்டும் என்றார் அவர்.
இந்நிகழ்ச்சியில், நாகர்கோவில் சார் -ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர், வேளாண் இணை இயக்குநர் ஜி.மனோகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) க. குணபாலன், துணை இயக்குநர் (தோட்டக்கலைதுறை) அசோக் மேக்ரின், வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் கு.கவிதா, மாவட்ட வளர்ச்சி மேலாளர் (நபார்டு) சைலேஷ் மற்றும் அனைத்து அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.