குழித்துறை அருகே விபத்தில் இளைஞர் சாவு
By DIN | Published On : 05th January 2019 01:18 AM | Last Updated : 05th January 2019 01:18 AM | அ+அ அ- |

குழித்துறை அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.
அருமனை அருகேயுள்ள முழுக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் மகன் சனு (23). இவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார்.
வியாழக்கிழமை இரவு வேலை முடிந்த பின் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் ரானுடன் (26) மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனராம். குழித்துறை அருகே கழுவன்திட்டை பகுதியில் சாலை வளைவில் சென்ற போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி அப்பகுதியிலுள்ள ஒரு வீட்டின் சுற்றுச்சுவர் மீது மோதியதில், இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.
அப்பகுதியினர் இருவரையும் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து சனுவை மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார். ரான் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து மார்த்தாண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.