கோரிக்கைகளை வலியுறுத்தி குலசேகரத்தில் பிஎம்எஸ் தொழிற்சங்கத்தினர் வெள்ளிக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
திருவட்டாறு ஒன்றிய பிஎம்எஸ் சார்பில் குலசேகரம் சந்தை சந்திப்பில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் பி. தேவதாஸ் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் ஜே. கிரிஜா, ஒன்றியப் பொருளர் ஆர். ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பாளர் தோட்டத் தொழிலாளர் சங்க ஆர். ஜெயக்குமார், ஒன்றியப் பொதுச் செயலர் என். நடேசன், வாகன தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலர் பி. ஜெயபாலன், மாவட்டத் தலைவர் கே. விஸ்வநாதன், மாவட்டப் பொதுச் செயலர் எஸ். குமாரதாஸ், மாநிலப் பொதுச் செயலர் கே. முருகேசன் ஆகியோர் பேசினர். ஒன்றிய அமைப்பாளர் சி. சண்முகம் நன்றி கூறினார்.
போராட்டத்தில், உடலுழைப்புத் தொழிலாளர்களின் நலவாரியங்களில் ஓய்வூதியம் அனுமதிக்கப்பட்ட, ஓய்வூதியதாரர்களுக்கு காலதாமதமின்றி ஓய்வூதியம் வழங்க வேண்டும். குறைந்த பட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ. 3 ஆயிரம் நிர்ணயம் செய்து, ஓய்வூதியம் அனுமதிக்கப்பட்ட காலத்திலிருந்து நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும். ஜிஎஸ்டி வரிக்குள் பெட்ரோல், டீசல் விலைகளைக் கொண்டு வந்து பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.