குளச்சல் நகராட்சி மற்றும் திங்கள்நகர் உள்ளிட்ட நான்கு பேரூராட்சிகளில், புகையில்லா போகியை முன்னிட்டு பழைய துணிகள் சேகரிப்பு முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த முகாம் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.
போகி பண்டிகையை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் 11, 12,13 ஆகிய தேதிகளில் உபயோகமில்லாத துணிகள் சேகரிக்கப்பட்டு, அவை துணிப்பைகளாகவும், இதர பயன்பாட்டிற்குரிய பொருள்களாகவும் மாற்றப்படவுள்ளன. எனவே உபயோகமில்லாத பழைய துணிகளை நாகர்கோவில் பைரவி பவுண்டேஷன் அலுவலகம் , குளச்சல் நகராட்சி மற்றும் திங்கள்நகர், புதுக்கடை, மருங்கூர், தாழாக்குடி பேரூராட்சிகளில் ஒப்படைக்கலாம் என பவுண்டேஷன் இயக்குநர் சி.ஷோபா தெரிவித்துள்ளார். இதன் தொடக்கமாக குளச்சல் நகராட்சியில் நடைபெற்ற புகையில்லா போகி பழைய துணிகள் சேகரிக்கும் முகாமிற்கு, நகராட்சி ஆணையர் ஏகராஜ் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து பழைய துணிகளைப் பெற்று நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.
திங்கள்நகர் பேரூராட்சியில் செயல் அலுவலர் ஜெயமாலனி, பழைய துணிகள் சேகரிப்பு முகாமை தொடங்கிவைத்தார். இதுபோல் புதுக்கடை, மருங்கூர், தாழாக்குடி பேரூராட்சி அலுவலகங்களிலும் ஞாயிற்றுக்கிழமை வரை பொதுமக்கள் பழைய துணிகளை வழங்கலாம்.
இந்நிகழ்ச்சிகளில் பவுண்டேசன் இயக்குநர், தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜே.ஜோ.பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.