நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம், களியக்காவிளை, கோட்டாறு பகுதியில் பள்ளி, கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு
மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை வகித்தார். வருவாய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் சுமதி,
வட்டாட்சியர்கள் கோலப்பன், சுப்பிரமணியன், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
ரோஜாவனம் பாரா மெடிக்கல் கல்லூரியில் தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரியின் துணைத்தலைவர் அருள் ஜோதி தலைமை வகித்தார். தமிழ்ச்சங்க மாணவர் செயலர் தினேஷ், நிர்வாகஅலுவலர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், கவிஞர் அரங்கசாமி பங்கேற்றுப் பேசினார். உலகில் அமைதி, சமாதானம், சகோதரத்துவம் நிலவ மாணவர்கள் பிரார்த்தனை செய்தனர்.
நாகர்கோவில், கோட்டாறு குமரி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளியின் தாளாளர் ந. சொக்கலிங்கம் தலைமை வகித்தார். பள்ளி செயற்குழு உறுப்பினர் ந. சிவகாமி குத்துவிளக்கு ஏற்றினார். இதையொட்டி நடைபெற்ற கோலப்போட்டியில் வென்ற ஆசிரியைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
களியக்காவிளை: நாஞ்சில் கத்தோலிக்க கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இவ்விழாவில் குழித்துறை மறை மாவட்ட குருகுல முதல்வர் இயேசுரத்தினம், கல்லூரியின் முன்னாள் செயலர் ஜோஸ்ராபின்சன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
இதையொட்டி, கல்லூரியில் குடில்கள், கிணறு, வயல்வெளி போன்றவைகளை கிராமிய மணம் கமழும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. மாணவர்களின் கும்மியாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்லூரிச் செயலர் எக்கர்மென்ஸ் மைக்கேல் வாழ்த்திப் பேசினார்.
முதல்வர் மீனாட்சி சுந்தரராஜன் நன்றி கூறினார். மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.