கன்னியாகுமரி ஜீரோ பாயின்ட் பகுதியில் 125 அடி உயரமுள்ள தேசிய கொடிக்கம்பம் அமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது என ஏ. விஜயகுமார் எம்.பி. தெரிவித்தார்.
இந்தியாவின் தென் எல்லையான கன்னியாகுமரியை அடையாளப்படுத்தும் வகையில் நான்கு வழிச்சாலை நிறைவடையும் . ஜீரோ பாயின்ட் பகுதியில் 125 அடி உயரத்தில் தேசிய கொடிக்கம்பம், நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 20 லட்சம் மதிப்பில் அமைக்கப்படுகிறது. இக்கொடிக் கம்பம் அமையவிருக்கும் இடத்தை ஏ. விஜயகுமார் சனிக்கிழமை பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: நமது நாட்டின் தேசியக் கொடியை கௌரவிக்கும் வகையில் நாட்டின் பல இடங்களில் உயரமான தேசிய கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சுற்றுலாத் தலமாக திகழும் கன்னியாகுமரியில் இதுபோன்ற கொடிக்கம்பம் அமைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின்கட்கரியை சந்தித்து கோரிக்கை விடுத்தேன். மத்திய அரசு அனுமதி வழங்கியதை அடுத்து கொடிக்கம்பம் அமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 13) தொடங்குகிறது. இம்மாதம் 26 ஆம் தேதிக்குள் இப்பணி முடிக்கப்படும் என்றார் அவர்.
அப்போது, அரசு வழக்குரைஞர் ஏ. ஞானசேகர், அகஸ்தீசுவரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சந்தையடி பாலகிருஷ்ணன், அதிமுக நிர்வாகிகள் கனகராஜன், ஆர்.எஸ்.மாசானமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.