சபரிமலையின் புனிதத்தை கெடுப்பவர்களை ஐயப்பன் தண்டிப்பார் என மலையாள திரைப்பட நடிகரும் எம்.பி. யுமான சுரேஷ்கோபி தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரத்தில் உயர்மின் கோபுர மின்விளக்கு, மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 3 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர் கோபுர மின்விளக்கை சுரேஷ்கோபி இயக்கி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியது: இந்த ஆன்மிக பூமியில் மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் மகிழ்ச்சி.
சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தெளிவான முடிவை அறிவிக்கவில்லை. இதுதொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் இம்மாதம் 22 இல் விசாரணைக்கு வருகிறது. நீதிமன்ற கருத்து அடிப்படையில் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்.
மாறுவேடத்தில் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்வது சரிதானா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களித்தது தவறு என்பதை கேரள மக்கள் உணர்ந்துள்ளனர். சபரிமலையில் கடவுளை, ஆச்சாரங்களை மதிக்காமல் செயல்பட்டு வருகின்றனர். சபரிமலையின் புனிதத்தைக் கெடுப்பவர் களை ஐயப்பன் தண்டிப்பார் என்றார் அவர்.