கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணியில் சேருவதற்கு 3,200 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் ஆசிரியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இப்பணியில் சேர நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கடந்த 25 ஆம் தேதி முதல் பட்டதாரிகள் கூட்டம் அலைமோதியது.
முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஏராளமானோர் விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து அளித்தனர்.
குமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில், தக்கலை, குழித்துறை, திருவட்டாறு ஆகிய 4 கல்வி மாவட்டங்களிலும், திங்கள்கிழமை வரை சுமார் 3,200 பட்டதாரிகள் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இதில், நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் மட்டும் 2 ஆயிரம் பேரும், திருவட்டாறு கல்வி மாவட்டத்தில் 500 பேரும் விண்ணப்பித்துள்ளனர் என்று கல்வி அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.