நித்திரவிளை அருகே நிலத் தகராறு தொடர்பாக ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நித்திரவிளை அருகே கொல்லால், சுண்டவிளை பகுதியைச் சேர்ந்தவர் ரா. சதாசிவன் (60). காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருக்குச் சொந்தமான 9.5 சென்ட் நிலம் நித்திரவிளை அருகே சரல், ஆலம்பாறவிளை பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் (41) வீட்டருகே உள்ளதாம். ஒரு மாதத்துக்கு முன்பு இந்த நிலத்தின் எல்லை கல்லை ஸ்டீபன் மற்றும் அவரது மனைவி சந்திரகலா (32) சேர்ந்து அகற்றினராம்.
இதுகுறித்து கேட்டதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அந்த நிலத்தில் எல்லைக் கல்லை நடுவதற்காக சதாசிவன் சென்றபோது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இருதரப்பினரும் அளித்த தனித்தனி புகாரின்பேரில், நித்திரவிளை போலீஸார், ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் உள்பட இரு தரப்பையும் சேர்ந்த 4 பேர் மீது வழக்குப் பதிந்து, ஸ்டீபனை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.