கன்னியாகுமரி மாவட்ட பிராணிகள் வதை தடுப்புச் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் பிராணிகள் வதை தடுப்புச் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பதவிக்கு இருவரை தேர்வு செய்யும் பொருட்டு, விலங்குகள் நல ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இச்சங்கத்தில் இணைந்து பணியாற்ற விரும்பும் ஆர்வலர்கள் தங்களது சுய விவரங்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வத்தில் தங்களின் ஈடுபாடு குறித்த விவரங்களுடன் வருகிற ஜூலை 15ஆம் தேதிக்குள், நாகர்கோவில் கோட்டத்தில் இருப்பவர்கள் உதவி இயக்குநர், கால்நடை பராமரிப்புத் துறை, கால்நடை மருத்துவப் பெருமனை வளாகம், நாகர்கோவில் என்ற முகவரியிலும், தக்கலை கோட்டத்தில் உள்ளவர்கள், உதவி இயக்குநர், கால்நடை பராமரிப்புத் துறை, தக்கலை (இருப்பு) சுவாமியார்மடம் என்ற முகவரியிலும் மற்றும் மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத் துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 3ஆவது தளம், நாகர்கோவில் என்ற முகவரியிலும் விண்ணப்பிக்கலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.