நாகர்கோவிலிலிருந்து கேரள மாநிலத்துக்கு ஆட்டோ மூலம் கடத்தப்பட இருந்த 500 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் என். சதானந்தன் தலைமையில் தனித்துணை வட்டாட்சியர் சு. அருள்லிங்கம், தனிவருவாய் ஆய்வாளர் ரதன்ராஜ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தியபோது, ஓட்டுநர் ஆட்டோவை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டாராம். ஆட்டோவில் கேரளத்துக்கு கடத்தப்படுவதற்காக 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. அரிசி கோணம் அரசுக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. ஆட்டோ ஆட்சியர் அலுவலக வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அரிசியைக் கடத்தியவர் குறித்து அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.