தோவாளை அருகே பாதுகாக்கப்பட்ட காப்புக் காட்டில் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்ட 2 பேரை கைது செய்த வனத்துறையினர், அவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
பூதப்பாண்டி வனச்சரகம் தெற்கு மலை மேற்கு பீட்டில், வனவர் பிரவீன் தலைமையில் வனக்காப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, வேட்டை தடுப்பு காவலர்கள் ராஜபால், ஜெகன் உள்ளிட்டோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வன உயிரின சரணாலய பகுதியில் மாடுகள் மேய்ச்சலுக்கு விடப்பட்டதை கண்டறிந்தனர். இதையடுத்து, மேய்ச்சலில் இருந்த மாடுகளை பிடித்து விசாரணை நடத்திய வனத்துறையினர், அவற்றின் உரிமையாளர்களான ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த ஆறுமுகம் (41), பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் (38) ஆகிய இருவருக்கு தலா ரூ.12 ஆயிரத்து 500 வீதம் என, மொத்தம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். பின்னர் வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972 இன் கீழ் வழக்குப் பதிந்து, தடை செய்யப்பட்ட பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டதாக, 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.