நாகர்கோவில் ரயில் நிலையம் வழியாக கேரளத்துக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பறக்கும் படையினர் வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.
அதிகாரிகளுக்கு வியாழக்கிழமை இரவு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பறக்கும் படை வட்டாட்சியர் சதானந்தன் தலைமையில், துணை வட்டாட்சியர் அருள் லிங்கம், வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார் அடங்கிய குழுவினர் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சென்னையிலிருந்து வந்த குருவாயூர் விரைவு ரயிலில் சோதனையிட்ட போது, அதில் 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளில் கட்டப்பட்ட நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த அரிசிக்கு யாரும் உரிமை கோரவில்லை.
மேலும், இந்த அரிசி கேரளத்துக்கு கடத்தும் வகையில் கொண்டுவரப்பட்டதாக இருக்கும் என்ற அடிப்படையில், அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து, அரிசியை கடத்திவந்த நபர்கள் குறித்து பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.