தேர்ந்தெடுக்கப்பட்ட கர்நாடக மாநில ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பது ஜனநாயக படுகொலை என்றார் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஹெச். வசந்தகுமார்.
கர்நாடகத்தில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டு வருவதாக பாஜகவை கண்டித்து, நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம் முன் காங்கிரஸ் கட்சி சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் குமரி மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஹெச். வசந்தகுமார், குளச்சல் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஜே.ஜி. பிரின்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிறகு ஹெச். வசந்தகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
பாஜக அரசுக்கு அடிமைப்பட்டு போனால், அவர்கள் வாழவைப்பார்கள். எதிர்த்தால் குரலை ஒடுக்குவார்கள். இதுதான் பாஜகவின் கொள்கையாக உள்ளது. கர்நாடகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பது ஜனநாயக படுகொலை. அங்கு ஆளும் காங்கிரஸ் ஆட்சியை பாஜகவால் ஒருபோதும் கவிழ்க்க முடியாது.
நாடு முழுவதும் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் முறையான திட்டங்கள் அமல்படுத்தப்படாமல், போதிய நிதியும் ஒதுக்காமல் உள்ளனர். இது ஜனநாயக படுகொலை. ஜனநாயகத்தை காப்பாற்றாத மோடி அரசு ஒருபோதும் தொடரப்போவது இல்லை. தற்போது கர்நாடகத்தில் இருக்கும் காங்கிரஸ் அரசை கவிழ்க்க வேண்டும் என பிரதமர் மோடி வேலை செய்கிறார். ஆனால், அது ஒருபோதும் வெற்றி பெறாது. ஆட்சியை கலைக்கும் செயலை காங்கிரஸ் கட்சி செய்யாது என்றார் அவர்.