தக்கலை புனித எலியாசியார் ஆலய நூற்றாண்டு விழா, பங்கு குடும்ப விழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இவ்விழாவையொட்டி, சாரிபாத் இல்லம், நூற்றாண்டு விழா நுழைவு வாயில் ஆகியவற்றை குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் திறந்தார். மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் வின்சென்ட் மார்பவுலோஸ் அர்ச்சித்தார்.
முன்னதாக ஜெபமாலை, நவநாள், புகழ்மாலை ஆகியவை நடைபெற்றன.
இதையடுத்து, ஆலய வளாகத்தில் குழித்துறை மறை மாவட்ட ஆயர், இறை மக்கள் முன்னிலையில் கொடி ஏற்றினார். பின்னர், ஆயர் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் அருளுரை வழங்கினார். இதில், ஆலய பங்குத்தந்தை மரிய டேவிட், முளகுமூடு வட்டார முதல்வர் மரிய ராஜேந்திரன், ஆயரின் செயலர் மார்ட்டின், இணை பங்குப் பணியாளர் விமல் சந்தனராஜ், பங்குப்பேரவை துணைத்தலைவர் ஜஸ்டின்ராஜ், செயலர் ஜான்சி ததேயூஸ், இணைச் செயலர் அனுஸ்மோன், பொருளாளர் கிறிஸ்டோபர், அருள் பணியாளர்கள் அஞ்சல்மூஸ், வின்சென்ட், பால் ஆன்ட்ரோ, ஞானபிரகாசம், சிங்காராயன், ரைமண்ட், அனஸ்தாஸ், ஆல்பர்ட், வென்ஸஸ்லாஸ், பேரவை நிர்வாகிகள், அருள்சகோதரிகள்,
இறைமக்கள் பங்கேற்றனர்.
திருவிழா நாள்களில் தினமும் ஜெபமாலை, நவநாள், புகழ்மாலை, திருப்பலி, கலை நிகழ்ச்சிகள், கதைக் கதம்பம், 9 ஆம் நாளான சனிக்கிழமை (ஜூலை 20) தேர் பவனி ஆகியவை நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) காலை 8.30 மணிக்கு திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடம்பரத் திருப்பலி நடைபெறுகிறது.
திருப்பலியை மதுரை உயர் மறை மாவட்ட ஆயரும் தமிழக ஆயர் பேரவைத் தலைவரும் பேராயருமான அந்தோணி பாப்புசாமி, குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஆகியோர் நடத்துகின்றனர். மாலையில் நடைபெறும் நூற்றாண்டு விழா, நிறைவு விழாவுக்கு மறை மாவட்ட முதன்மையர் யேசுரெத்தினம் தலைமை வகிக்கிறார்.
திருச்சி கார்மல் சபையின் தமிழக மறை மாநிலத் தலைவர் அருள்ராஜ், ஆசியுரை வழங்குகிறார். பாலபிரஜாபதி அடிகளார், உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் பிரான்சிஸ் ஜூலியன், ஹெச்.வசந்தகுமார் எம்.பி., கவிஞர் தக்கலை ஹலீமா, மகேந்திரகிரி இஸ்ரோ மேலாளர் பென்சிகர் ராஜன், மனோதங்கராஜ் எம்.எல்.ஏ, நகராட்சி ஆணையர் மூர்த்தி ஆகியோர் வாழ்த்திப் பேசுகின்றனர். புனித எலியாசியார் கலைக் குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.