கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருகே மணல் கடத்தியதாக 2 மினி லாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வாகனங்களில் மண், மணல் எடுத்துச் செல்வதற்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. இதனிடையே, புள்ளியல் மற்றும் சுரங்கத் துறை தனி வருவாய் ஆய்வாளர் பீர்முகமது ராபி தலைமையில் அதிகாரிகள் திருவட்டாறு அருகே வெட்டுக்குழி பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த 2 மினி லாரிகளை நிறுத்தி சோதனை நடத்த முயன்றனர். அப்போது, 2 மினி லாரிகளையும்
நிறுத்திய அதன் ஓட்டுநர்கள் தப்பியோடி விட்டனராம். சுரங்கத்துறை அதிகாரிகள் மணல் கடத்தி வந்த 2 மினி லாரிகளை பறிமுதல் செய்து திருவட்டாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.