தேசிய வாள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் தமிழக அணிக்கான வீரர்கள் தேர்வு முகாம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூரில் நடைபெறுகிறது.
10 முதல் 12 வயதுக்குள்பட்டோருக்கான தேசிய அளவிலான வாள் விளையாட்டுப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் நடைபெறுகிறது. இதில், பங்கேற்ற இருக்கும் தமிழக அணிக்கான வீரர் மற்றும் வீராங்கனைகள் தேர்வு முகாம் இம்மாதம் 19 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை 3 நாள்கள் நாமக்கல்லில் நடைபெறுகிறது.
இதில், கலந்து கொள்ளும் கன்னியாகுமரி மாவட்ட அணிக்கான வீரர்கள் தேர்வு முகாம் செவ்வாய்க்கிழமை (ஜூலை16) மாலை 4 மணிக்கு ஆற்றூர், கல்லுப்பாலம் பகுதியில் செயல்படும் கன்னியாகுமரி மாவட்ட வாள் விளையாட்டு கழகப் பயிற்சி மையத்தில் நடைபெறுகிறது. இந்த முகாமில், கன்னியாகுமரி மாவட்ட வாள் விளையாட்டு கழகத்தின்கீழ் இயங்கும் அமைப்புகள், தகுதியுடைய மாணவர், மாணவிகள் கலந்து கொள்ளலாம் என குமரி மாவட்ட வாள் விளையாட்டு கழகத் தலைவர் சிந்துகுமார், செயலர் அமிர்தராஜ், பொருளாளர் சுந்தர்ராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர்.