பேராயர் மார் இவானியோஸ் ஆண்டகையின் 66 ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி மார்த்தாண்டத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு சனிக்கிழமை பாதயாத்திரை தொடங்கியது. இந்த பாதயாத்திரை ஞாயிற்றுக்கிழமை திருவனந்தபுரம் சென்றடைகிறது.
மலங்கரை சிறியன் கத்தோலிக்க முதல் ஆயர் மார் இவானியோஸ் ஆண்டகையின் 66 ஆவது ஆண்டு நினைவு தினம் திருவனந்தபுரம், பட்டம் மரியன்னை பேராலயத்தில் திங்கள்கிழமை (ஜூலை 15) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மார்த்தாண்டம் மறை மாவட்ட இளைஞர் இயக்கம் சார்பில் மார்த்தாண்டத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு பாதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.
இதன் தொடக்க விழா மார்த்தாண்டம் கிறிஸ்து அரசர் பேராலயத்தில் நடைபெற்றது. இதையொட்டி, மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து பேராயரின் நினைவு பெருநாள் பாதயாத்திரையை மார்த்தாண்டம் ஆயர் தொடங்கி வைத்தார்.
இதில், மார்த்தாண்டம் கிறிஸ்து அரசர் பேராலய பங்குத்தந்தை ஜோஸ்பிரைட், மறை மாவட்ட மலங்கரை கத்தோலிக்க இளைஞர் இயக்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பாதயாத்திரை குழித்துறை, களியக்காவிளை, பாறசாலை, நெய்யாற்றின்கரை வழியாக திருவனந்தபுரம் பட்டம் பேராலயம் சென்றடைகிறது.