பள்ளி நிர்வாகத்தின் உரிமையை மாற்றுவதற்கு முறைகேடாக ஆவணங்கள் தயாரித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குமரி மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து, நாம் தமிழர் கட்சியின் குமரி மண்டல பொருளாளர் ஜான்சிலின் சேவியர்ராஜ் தலைமையில் வந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரேவிடம் அளித்துள்ள மனு: விளவங்கோடு வட்டத்தில், அரசு நிதி உதவி பெறும் சிறுபான்மை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியை கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் வாங்கியுள்ளார். அதனை அவர் தனது பெயருக்கு மாற்றமும் செய்துள்ளார். கேரளத்தில் குடியிருக்கும் அவர் தமிழகத்தில் உள்ள பள்ளியை வாங்குவதற்கும், தனது பெயருக்கு மாற்றம் செய்யவும், குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களை முறைகேடாக தயாரித்துள்ளார். அதிகாரிகளின் துணையுடன் இது நடைபெற்றுள்ளது. குடும்ப அட்டையை வைத்து ஆதார் உள்ளிட்டவைகளையும் பெற்றுள்ளனர்.
மேலும் பள்ளி பெயர் மாற்றம் செய்யப்பட்டபோது பள்ளியின் சிறுபான்மை அந்தஸ்து ரத்து செய்யப்படாமல் இருக்க கல்வித்துறை அதிகாரிகளும் இதற்கு துணையாக இருந்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு இருப்பிட ஆவணங்கள் தயாரிக்கப்பட்டது தொடர்பாகவும், இதற்கு துணையாகஇருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்பதுடன் பள்ளியை அரசு வசம் கொண்டுவர கல்வித்துறைக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.