கடல் கொந்தளிப்பால் கடியப்பட்டினத்தில் வீடுகள் இடியும் அபாயம் உள்ளதாக கூறி, மணவாளக்குறிச்சியில் சனிக்கிழமை (ஜூன் 15) போராட்டம் நடைபெறுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்பகுதிகளில் சூறைக்காற்று வீசுவதால், ராட்சத அலைகள் எழுந்து மணற்பரப்பையும் தாண்டி விழுகிறது. இரு நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட கடல் கொந்தளிப்பின் போது அந்தோணியார் தெருவில் தடுப்புச் சுவரை தாண்டி கடல் நீர் புகுந்ததால் தடுப்புச் சுவர் சேதமடைந்து கடலில் சரிந்தது. இதனால் அங்கு 400 வீடுகளை கடல் நீர் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அப்பகுதியை வியாழக்கிழமை பார்வையிட்ட குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ், செய்தியாளர்களிடம் கூறியது: மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. இதனால் கடல் அரிப்பு ஏற்பட்டு மீனவர்களின் உடமைகள் பெரும் பாதிப்படைகின்றன.
தற்போது கடல் கொந்தளிப்பு காரணமாக அந்தோணியார் தெருவில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு மணற்பரப்பு கடலில் மூழ்கியுள்ளது. 200 மீட்டர் அளவில் தடுப்புச் சுவர் சேதமடைந்து கடலில் விழுந்துள்ளது. இதனால் வீடுகளுக்கு பாதுகாப்பு இல்லை. இதற்கு நிரந்தரத் தீர்வு காண அரசு முயலவில்லை.
எனவே, கடியப்பட்டினம் கிராம மக்களை திரட்டி சனிக்கிழமை (ஜூன் 15) காலை 11 மணிக்கு மணவாளக்குறிச்சி சந்திப்பில் எனது தலைமையில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.