நாகர்கோவில் மாநகரப் பகுதியில் நிலவும் குடிநீர்ப் பிரச்னைக்கு தீர்வு காண தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாகர்கோவில் நகரில் நிலவி வரும் குடிநீர்ப் பிரச்னைக்கு தீர்வு காண்பது மற்றும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து, தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநகராட்சிஆணையர் சரவணகுமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் புகார் மையம் அமைப்பது, நாகர்கோவில் நகரில் தற்போது உள்ள 863 ஆழ்துளை கிணறுகளில் பயனற்ற 43 கிணறுகளை தவிர, பிறவற்றில் பழுதுகளை கண்டறிந்து 3 முதல் 4 நாள்களுக்குள் குடிநீர் விநியோகத்தை சரிசெய்வது, புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பது, குடிநீரை மின்மோட்டார் மூலம் உறிஞ்சினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பது, அவ்வைசண்முகம் சாலைப் பணிகளை வரும் ஜூலை 25 ஆம் தேதிக்குள்ளும், புதைச் சாக்கடைத் திட்டப் பணிகளை 2020 மார்ச்சுக்குள்ளும் நிறைவு செய்வது, வடசேரி ஆராட்டு தெருவில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், என்.சுரேஷ் ராஜன் எம்எல்ஏ, மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன், செயற்பொறியாளர் (நீர்வள ஆதாரம்) வேத அருள்சேகர், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர்அ.ராஜன், ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் எஸ்.கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் தளவாய்சுந்தரம் கூறுகையில், குடிநீர், சாலைப் பிரச்னை போன்றவற்றுக்கு தீர்வு காண முடிவு எட்டப்பட்டுள்ளது. நகரில் நாய்த் தொல்லையைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
ஆணையர் சரவணகுமார் கூறுகையில், நாகர்கோவிலில் வாகனங்கள் நிறுத்துவதில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், மீனாட்சிபுரம் அரசு விரைவுப்பேருந்து நிலையத்தில் பல்முனை கார் நிறுத்தத்தை ஏற்படுத்த அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் பிரச்னைகள் குறித்து கட்- செவி அஞ்சல்(வாட்ஸ்- அப்) மூலம் புகார் தெரிவிக்கலாம் என்றார் அவர்.