புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து மக்கள் கருத்து தெரிவிக்க 6 மாதம் அவகாசம் அளிக்கவேண்டும் என தமிழ்நாடு அறிவியல் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்13ஆவது மாவட்ட மாநாடு, சுங்கான்கடையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் விஞ்ஞானி பால்வண்ணன் தலைமை வகித்தார். மற்றொரு துணைத் தலைவர் வசந்தலதா வரவேற்றார். இணைச் செயலர் சிவஸ்ரீ ரமேஷ் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். கௌரவத் தலைவர் இரா.செலின்மேரி விளக்கிப் பேசினார். மாநிலத் தலைவர் பேராசிரியர் மோகனா, "மாற்றத்துக்கான அறிவியல்' என்ற தலைப்பில் பேசினார்.
மாவட்டச் செயலர் ஆரோக்கிய டோமினிக் ராஜ் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் சுசீலா வரவு- செலவு விவரம் தாக்கல் செய்தார். பேராசிரியர்கள் ஜேசர் ஜெபநேசன், சுபாகரன், மாநிலக் குழு உறுப்பினர் ஜாண்சிலிபாய் ஜினோபாய் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. அதில், தலைவராக விஞ்ஞானி பால்வண்ணனும், கெளரவத் தலைவர், செயலர், பொருளாளர், இணைச் செயலர் பொறுப்புகளில் முன்னர் இருந்தவர்களே தொடர்கின்றனர்.
சசிக்குமார், கணேசன், வசந்தலதா, பத்மதேவன், பேரா.சுபாகரன் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், சுஜாதா, லீலா, பத்மதேவன், ஸ்ரீகண்டன், ஜினோபாய் ஆகியோர் இணைச் செயலர்களாகவும் தேர்வாகினர். மாநிலச் செயலர் அமலராஜன் நிறைவுரையாற்றினார். மாநிலச் செயலர் எம்.சசிகுமார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இணைச் செயலர் சுஜதா நன்றி கூறினார்.
மாநாட்டில், "புதிய தேசிய கல்விக் கொள்கை அறிக்கையை அனைத்து மொழிகளிலும் வெளியிட வேண்டும்; கல்விக்கொள்கை குறித்து மக்கள் கருத்து தெரிவிக்க 6 மாதம் அவகாசம் வழங்க வேண்டும்; கல்வியும், மருத்துவமும் ஏழை- எளிய மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும்; மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் இயற்றிஅறிவியல் மனப்பான்மையை வளர்க்க வழிவகை செய்யவேண்டும்; மீத்தேன், ஹைட்ரோ கார்பன், எட்டுவழிச் சாலை போன்ற திட்டங்களால் விளை நிலங்கள் பாதிக்கும் என கருதும் மக்களின் அச்சத்தைப் போக்க மத்திய- மாநில அரசுகள் முயற்சிக்க வேண்டும்; அரசு மற்றும் அதன் உதவி பெறும் பள்ளிகளை பாதுகாத்து, கற்றல் இடைநிற்றலை தடுக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.