களியக்காவிளை அருகே பளுகல் காவல் சரக பகுதியில் சிறப்பு உதவி-ஆய்வாளரை தாக்கியவரை போலீஸார் கைது செய்தனர்.
களியக்காவிளை அருகேயுள்ள இளஞ்சிறை, ஒற்றப்பனங்காலை பகுதியைச் சேர்ந்தவர் பொன்னையன் மகன் ராஜ்குமார் (47). இவர் இளஞ்சிறை பகுதியிலுள்ள ஒரு கடையிலிருந்து வெள்ளிக்கிழமை பொருள்கள் வாங்கிவிட்டு அதற்கான பணத்தை கொடுக்காமல் தகராறில் ஈடுபட்டாராம். இது குறித்து தகவலறிந்து பளுகல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அந்தோணி அங்கு வந்தாராம். அவரிடமும் ராஜ்குமார் தகராறில் ஈடுபட்டாராம். அப்போது பணி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த பளுகல் காவல் நிலைய சிறப்பு உதவி-ஆய்வாளர் வில்சன் அங்கு வந்து, தகராறில் ஈடுபட்டவரை பிடிக்க முயன்றாராம். அப்போது ராஜ்குமார் அரிவாளால் வெட்டியதில் சிறப்பு உதவி-ஆய்வாளர் வில்சன் காயமடைந்தார். அவரை அப்பகுதியினர் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து பளுகல் போலீஸார் வழக்குப் பதிந்து, ராஜ்குமாரை கைது செய்தனர். அவர் மீது பளுகல் காவல் நிலையத்தில் அடிதடி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.