குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் தாக்கப்பட்டதை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 17) பிற்பகலில் முளகுமூடு புனித மரியன்னை ஆலய வளாகத்தில் கண்டன கூட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து, குழித்துறை மறைமாவட்டஆயர் இல்லத்தில் மறைமாவட்ட குருகுல முதல்வர் ஜேசுரத்தினம் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: குழித்துறை மறைமாவட்டத்துக்கு உள்பட்ட அப்பட்டுவிளை பகுதியில் புனித அந்தோணியார் பங்கு, புனித சூசையப்பர் பங்கு என இரு பங்குகள் உள்ளன.
இந்த இரு பங்கு மக்களிடையே நிலம் தொடர்பான பிரச்னை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இப் பிரச்னையை சுமுகமான முறையில் தீர்வுக்கு கொண்டு வர மறைமாவட்டம் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. தொடர்ந்து இருதரப்பினரிடையே அமைதியான சூழலை ஏற்படுத்த ஆயர் ஜெரோம்தாஸ் முயற்சிகளை எடுத்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி அப்பட்டுவிளை புனித அந்தோணியார் பங்கைச் சேர்ந்த ஒருசாரார் கும்பலாக வந்து, ஆயர் ஜெரோம்தாஸை தாக்கினர். அதை தடுக்க முயன்ற மறைமாவட்ட பொருளாளர் அகஸ்டின், ஆயர் இல்ல காவலாளி மனோகரன் ஆகியோரையும் அவர்கள் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.
இச் சம்பவத்தை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மறைமாவட்ட அனைத்துப் பங்கு மக்களும் இணைந்து முளகுமூடு புனித மரியன்னை ஆலய வளாகத்தில் கண்டன கூட்டம் நடைபெற உள்ளது என தெரிவித்தார். அப்போது, கண்டன கூட்ட ஒருங்கிணைப்பாளர் மரிய வின்சென்ட், மறைமாவட்ட செய்தி தொடர்பாளர் ஷெல்லி ஆகியோர் உடனிருந்தனர்.