மக்களவைத் தேர்தல் தேதியை மாற்றக்கோரி ஜனநாயக கிறிஸ்தவ பேரவை தேர்தல் ஆணையத்திற்கு மனு அனுப்பியுள்ளது.
இதுகுறித்து அமைப்பின் உயர்மட்ட குழு ஆலோசகர் ஜார்ஜ் பொன்னையா வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை;
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது கிறிஸ்தவ மக்களிடையே பேரதிர்ச்சியை அளித்துள்ளது. ஏனென்றால் அன்றைய தினத்தை கிறிஸ்தவ மக்கள் புனித வியாழனாக கொண்டாடுகிறார்கள். இயேசுவின் மரணத்திற்கு முந்தைய நாளான பாஸ்கா விழாவை கொண்டாடி 12 சீடர்களின் பாதங்களைக் கழுவும் நிகழ்ச்சியையும், இயேசுவின் நற்கருணையை ஏற்படுத்திய விழாவையும் கொண்டாட ஆலயங்களில் கூடி நாள் முழுவதும் வழிபடுவார்கள். இதனால் கிறிஸ்தவர்கள் வாக்குச் சாவடிகளுக்கு போக முடியாத நிலை ஏற்படும். மேலும் ஏராளமான கிறிஸ்தவப் பள்ளிக் கூடங்கள் வாக்குச் சாவடிகளாக பயன்படுத்தப்படுகின்றன.
இந்த பள்ளிக் கூடங்கள் ஆலய வளாகங்களில் உள்ளதால், இங்கு மக்கள் வாக்களிக்க செல்லும் போது அது வழிபாடுகளுக்கு இடையூறாக இருக்கும். எனவே இந்த தேர்தல் தேதியை மாற்றிட வேண்டி தேர்தல் ஆணையத்திற்கு மனு அனுப்பியுள்ளோம். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து நீதி மன்றங்களில் வழக்குத் தொடரவும் தீர்மானித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.