முள்ளங்கனாவிளை ஊராட்சியில் குடிநீர் ஏற்றும் மோட்டார் அறைகளில் மின்வயர்கள் திருடுபோனதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட முள்ளங்கனாவிளை ஊராட்சியில் முக்கிய குடிநீராதாரமாக இருப்பது கொக்குறுணி குளக்கரையில் அமைந்திருக்கும் ஆழ்குழாய் கிணறுகள் ஆகும். இங்கிருந்து 12 குடிநீர் பகுதிகளுக்கு ஆழ்குழாய் கிணறுகள் மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இதில், தாழக்கன்விளை, பண்டாரவிளை, மயில்பறம்புவிளை உள்பட 9 ஆழ்குழாய் கிணறுகளில் மின்கம்பத்திலிருந்து மின்மோட்டாருக்கு செல்லும் மின்வயரை மர்ம நபர்கள் கடந்த திங்கள்கிழமை திருடிச் சென்றனராம். இதனால், சத்திவிளை, அங்கோட்டுவிளை, முள்ளங்கனாவிளை, கோனான்விளை, மலவிளை, மணலிதட்டுவிளை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் குடிதண்ணீரில்லாமல் மிகவும் அவதியடைந்துள்ளனர்.
இதுகுறித்து புகாரின் பேரில் கருங்கல் போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும், ஊராட்சி நிர்வாகம் இது குறித்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, பொதுமக்களுக்கு சீராக குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.