குமரி மாவட்டம், அரசு ரப்பர் கழக ரப்பர் தோட்டத்தில் சனிக்கிழமை தீப்பற்றியதில் ஆயிரக்கணக்கான ரப்பர் மரங்கள் தீயில் எரிந்து சேதமாகின.
அரசு ரப்பர் கழக மணலோடை கோட்டம் 22, 23 ஆகிய கூப்புகளில் வெள்ளிக்கிழமை திடீரென தீப்பிடித்தது. இந்தத் தீயை அணைக்க முடியாததால் சனிக்கிழமையும் அது தொடர்ந்து எரிந்தது. குலசேகரம் தீயணைப்பு நிலையத்தினர் அங்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
எனினும், ரப்பர்மரக் காடுகளுக்கு இடையே தீயணைப்பு வாகனம் செல்லமுடியாததால், தீயை அணைக்க முடியவில்லை. இதனால், அப்பகுதியில் சுமார் 1000 முதல் 1500 மரங்கள் வரை தீயில் கருகியதாகவும், அவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. அரசு ரப்பர் கழக ரப்பர் தோட்டங்களில் ஏற்கெனவே கீரிப்பாறை, குற்றியாறு உள்ளிட்ட பல இடங்களில் தீப்பிடித்து ரப்பர் மரங்கள் சேதமான நிலையில், தீத் தடுப்பு நடவடிக்கைகளை ரப்பர் கழக நிர்வாகம் தீவிரப்படுத்த வேண்டும் என தொழிற்சங்க நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.