சேர்ந்தமரம் அருகேயுள்ள வீரசிகாமணியில் அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் கலைநிகழ்ச்சி நடத்திய பிரச்னையில் 23 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
வீரசிகாமணியில் உள்ள ஸ்ரீராஜகோபாலமன்னார் சுவாமி கோயிலில் தற்போது பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் போது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயம் சார்பில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளை, அந்தந்த சமுதாயத்தினர் வசிக்கும் பகுதியில் நடத்திக்கொள்ள வேண்டும் என காவல் துறையால் அறிவுறுத்தப்பட்டு அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில், போலீஸாரிடம் தெரிவித்ததற்கு மாறாக, கோயிலில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாம். இதையடுத்து, அங்கு சென்ற காவல் நிலைய ஆய்வாளர் கோவிந்தன், உதவி ஆய்வாளர் உத்திரகுமார் ஆகியோர் காவல் துறை அனுமதி பெறாமல் கோயிலில் கலைநிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என கூறினர். எனினும் தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதையடுத்து, கலைநிகழ்ச்சியை நடத்திய சமுதாய பிரமுகர்கள் 23 பேர் மீது சேர்ந்தமரம் போலீஸார் வழக்குப் பதிந்தனர்.