மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள், தனி நபர் குறித்து விமர்சிக்கும் வகையில் சுவரொட்டி, துண்டு பிரசுரங்களில் வாசகங்கள் இடம்பெறக்கூடாது என அச்சக உரிமையாளர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகளை அச்சக உரிமையாளர்கள் கடைப்பிடிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்துக்கு ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே தலைமை வகித்தார்.
கூட்டத்தில் ஆட்சியர் பேசியது: மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். தேர்தல் பிரசாரம் தொடர்பான துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள் ஆகியவை அச்சிடும்போது அவற்றை வெளியிடுபவர் குறித்து
அடையாளம் காணும் வகையில் 2 நபர்களால் சான்றளிக்கப்பட்ட உறுதிமொழியினை இரட்டைப் படிவத்தில் அச்சகத்திற்கு அளிக்க வேண்டும்.
மேலும், அந்த உறுதிமொழி படிவம், அச்சிட்டுள்ள ஆவணத்தின் நகல் ஆகியவற்றை அச்சகத்தின் உரிமையாளர், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் அலுவலகத்திற்கு அச்சிடப்பட்ட 3 நாள்களுக்குள் அளிக்க வேண்டும். அச்சிடப்படும் சுவரொட்டி, பதாகைகள் ஆகியவற்றில் தொடர்புடைய அச்சகத்தின் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.
இவற்றை மீறுவோர் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், எந்த ஒரு அரசியல் கட்சியையோ, தனி நபரையோ தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் வகையிலான வாசகங்கள் விளம்பரங்களில் இடம்பெறக் கூடாது என்றார் அவர்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ரேவதி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ராஹூல்நாத், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மா.சுகன்யா, மாவட்ட கருவூல அலுவலர் பெருமாள், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் செல்வகுமார், ஹெச்.எம்.குழந்தைசாமி மற்றும் அச்சக உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.