மக்களவைத் தேர்தலில் காவல்துறையினர் பாரபட்சமின்றி பணியாற்ற வேண்டும் என்றார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்.
மக்களவைத் தேர்தல் தொடர்பாக, குமரி மாவட்ட காவல்துறை அலுவலர்களுடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் பேசியது: மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்குவதால் காவல் துறையினர் மிகவும் கண்காணிப்புடன் செயல்பட வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளாக இருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தேர்தல் நடவடிக்கையில் எந்தவித புகாருக்கும் இடமளிக்கக் கூடாது. கட்சி, ஜாதி மதத்துக்கு இடமளிக்காமல் பாரபட்சமின்றி பணியாற்ற வேண்டும். சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க, தேவை ஏற்படின் முன்னரே பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். மேலும் பொதுக்கூட்டங்களை விடியோ மூலம் பதிவு செய்ய வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயபாஸ்கர், உதவி காவல் கண்காணிப்பாளர்கள் ஜவஹர், கார்த்திக், துணை காவல் கண்காணிப்பாளர்கள் பாஸ்கரன், கார்த்திகேயன், மனோஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.