நாகர்கோவில் அருகே உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் சென்ற ரூ. 4 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
பறக்கும் படை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் தேர்தல் விதிமீறல்களை கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நெடுஞ்சாலைகளில் வாகனச் சோதனையிலும் ஈடுபட்டுள்ளனர். கடந்த 3 நாள்களாக குமரி மாவட்டத்தில் நடைபெற்ற வாகனச் சோதனையில் ரூ. 8 லட்சத்து 16 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பறக்கும்படை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். நாகர்கோவிலை அடுத்த எறும்புக்காடு பகுதியில் அவர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போது, அந்த வழியாக வந்த வெளிமாநில பதிவு எண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் ரூ. 4 லட்சம் இருந்தது தெரியவந்தது. மேலும் காரில் வந்தவர்களிடம் அந்தப் பணத்துக்கான உரிய ஆவணங்கள் எதுவுமில்லை. இதைத்தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.