சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் சர்வதேச அளவிலான கருத்தரங்கு 2 நாள்கள் நடைபெற்றது.
இந்திய அறிவியல் ஆராய்ச்சி கழகம் , உலக அளவில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் கழகம், இயந்திரங்களின் திறனறிதல் கழகம், பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் உதவியுடன் கல்லூரி மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல்துறையின் சார்பில் "தகவல் தொடர்பு மற்றும் ஆற்றல் கணக்கிடுதலில் தற்போதைய கண்டு பிடிப்புகள்' எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு கல்லூரியின் தாளாளர் மரியவில்லியம் தலைமை வகித்தார்.
கருத்தரங்கில், பல்வேறு மாநிலங்களில் இருந்து தேசிய தொழில்நுட்ப கல்லூரி, இந்திய தொழில்நுட்பக் கழகம் உள்பட பல்வேறு கல்லூரிகளில் இருந்து கலந்து கொண்ட மாணவர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் 200 க்கும் மேற்பட்டோர் ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
சுவிட்சர்லாந்து நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் வலைதள ஆய்வகத் தலைவர் சில்வியா ஜியோர்டானா பங்கேற்று, "வலை தளங்களின் பாதுகாப்பு' எனும் தலைப்பில் பேசினார்.
கல்லூரியின் பொருளாளர் பிரான்சிஸ் சேவியர், முதல்வர் கிறிஸ்டல் ஜெயசிங், துணை முதல்வர் மார்சலின் பெனோ ஆகியோர் பேசினர். ஒருங்கிணைப்பாளர் ஜட்சன் அறிக்கை வாசித்தார்.
கருத்தரங்கின் ஆய்வுக் கட்டுரைகள் உலகளவில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் தொழில்நுட்பத்துறை வலைதள நூலகத்தில் பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப் பட்டது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர், துறைத்தலைவர் மேரி, பேராசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் செய்தனர்.