குலசேகரத்தில் அரசியல் கட்சியினரின் கொடிக் கம்பங்கள் நீதிமன்ற உத்தரவுப் படி வியாழக்கிழமை அகற்றப்பட்டன.
குமரி மாவட்டத்தில் பொது இடங்களில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், கொடிக்கம்பங்களை அகற்றி விட்டு வருகிற 23ஆம் தேதிக்குள் இது தொடர்பான அறிக்கையை தாக்க செய்ய வேண்டுமென்றும் மாவட்ட ஆட்சியரைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்சிக் கொடிக்கம்பங்கள் உள்ளாட்சித் துறையினரால் அகற்றப்பட்டு வருகின்றன. நாகர்கோவில் நகராட்சிப் பகுதியில் தொடங்கிய இப்பணிகள், இப்போது பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
குலசேகரத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் ரெமாதேவி முன்னிலையில் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன.
தகவலறிந்து வந்த சில அரசியல் கட்சி நிர்வாகிகள் கொடிக்கம்ப பீடங்களில் இருந்த இரும்புக் கம்பங்களை வெட்டி எடுத்துச் சென்றனர்.
அரசியல் கட்சியினர் சிலர் இரும்புக் கம்பங்களை எடுத்துச் செல்லாததால், பேரூராட்சி நிர்வாகத்தினர், உடைக்கப்பட்ட பீடங்களுடன் கொடிக்கம்பங்களையும் எடுத்துச் சென்றனர்.