களியக்காவிளை பேருந்து நிலையத்திலிருந்து இரவு நேரம் குழித்துறை பணிமனைக்கு செல்லும் பேருந்துகளில் பயணியரை ஏற்றிச் செல்ல மறுத்து, பயணியர் இன்றி காலியாக இயக்கப்படுவது தொடர்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி, நாகர்கோவில், மதுரை மற்றும் இரயுமன்துறை, கொல்லங்கோடு, பனச்சமூடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து இரவு நேரம் களியக்காவிளை பேருந்து நிலையம் வந்து விட்டு குழித்துறை பணிமனைக்குச் செல்லும் பேருந்துகளின் பெரும்பாலான ஓட்டுநர், நடத்துநர்கள் பயணிகளை ஏற்றிச் செல்லாமல் பயணிகளின்றி காலியாகவே பேருந்துகளை பணிமனைக்கு கொண்டு செல்கிறார்கள்.
குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கேரளத்தில் வேலைக்குச் சென்றுவிட்டு, இரவு நேரம் களியக்காவிளை வரும் கூலித் தொழிலாளர்கள் இரவு 10 மணிக்கு மேல் வீட்டுக்குச் செல்ல நீண்ட நேரம் பேருந்துகளுக்காக காத்து நிற்க வேண்டியுள்ளது.
இந்த நிலையில் பணிமனைக்குச் செல்லும் பேருந்துகள் களியக்காவிளையிலிருந்து படந்தாலுமூடு பகுதிக்கு செல்லும் பயணிகளை ஏற்றாமல் செல்வதால் அவர்கள் ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்களில் அதிக கட்டணம் செலுத்தி செல்ல வேண்டியுள்ளது. இதனால் பயணிகளுக்கு அதிக பணச் செலவு ஏற்படுவதுடன், மன உளைச்சலும் ஏற்பட்டு வருவதுடன் அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டு வருகிறது.
ஆகவே, களியக்காவிளையிலிருந்து இரவு வேளையில் குழித்துறை பணிமனைக்குச் செல்லும் அனைத்துப் பேருந்துகளிலும் பயணிகளை ஏற்றிச் செல்ல போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.