கன்னியாகுமரியை அடுத்த முட்டப்பதியில் 11 நாள்கள் நடைபெறும் பங்குனித் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இப்பதியில் ஆண்டுதோறும் பங்குனித் திருவிழா 11 நாள்கள் நடைபெறும் . நிகழாண்டுத் திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை அதிகாலை 5.45 மணிக்கு தர்மகர்த்தாக்கள் பாலசுந்தரம், மனோகர செல்வன் ஆகியோர் கொடியேற்றினர். நண்பகல் 12 மணிக்கு பாற்கடலுக்கு தீர்த்தமாடச் செல்லுதல், இரவு அய்யாவுக்குப் பணிவிடை, வாகனப்பவனி, அன்னதர்மம் வழங்குதல் ஆகியன நடைபெற்றன. விழா நாள்களில் அய்யாவுக்குப் பணிவிடை, பால் தர்மம் வழங்குதல், உகப்படிப்பு, உச்சிப்படிப்பு, அன்னதர்மம், வாகன பவனி ஆகியன நடைபெறுகிறது.
கலிவேட்டை: திருவிழாவின் 8-ஆம் நாளான, மார்ச் 29-ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு அய்யாவுக்குப் பணிவிடை, நண்பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, இரவு 8 மணிக்கு பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளைக் குதிரை வாகனத்தில் அய்யா எழுந்தருளி வலம் வருதல், நள்ளிரவு 12 மணிக்கு அய்யா கடலில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி ஆகியன நடைபெறும். திருவிழா நிறைவு நாளான ஏப்ரல் 1-ஆம் தேதி அதிகாலையில் அய்யாவுக்குப் பணிவிடை தொடர்ந்து உகப்படிப்பு, பால் அன்னதர்மம், மாலை 5 மணிக்கு அய்யா சப்பர வாகனத்தில் எழுந்தருளி பதியைச் சுற்றி வலம் வருதல் ஆகியனநடைபெறும். 2-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கொடியிறக்கப்பட்டு விழா நிறைவு பெறும்.