கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி அருகே மின்னல் பாய்ந்ததில் தேவாலய கோபுரம் இடிந்து சேதமடைந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக இடி மின்னல், சூறைக் காற்றுடன் கோடை மழை பெய்து வருகிறது. மழையால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எனினும், பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்தன. குறிப்பாக சில நாள்களுக்கு முன்பு குலசேகரம் அருகே மாஞ்சக்கோணத்தில் மின்னல் பாய்ந்து 6 வயது மாணவர் உயிரிழந்தார்.
இதனிடையே, ஈசாந்திமங்கலம், கடுக்கரை பள்ளிக் கட்டடங்கள் மழைக்கு இடிந்து சேதமடைந்தன. மணவாளக் குறிச்சி அருகே சின்னவிளை கடற்கரை கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, மின்னல் பாய்ந்ததில் தேவாலய கோபுரம் பெயர்ந்து விழுந்தது. கோபுரத் தூண்களிலும் விரிசல் ஏற்பட்டது. இந்த தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பித்து அர்ச்சிக்கப்பட்ட நிலையில் மின்னல் பாய்ந்து சேதமடைந்த நிகழ்வு அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.