நாகர்கோவில் அருகே தண்டவாளத்தை கடந்த பெண் மீது ரயில் மோதியதில் உயிரிழந்தார்.
நாகர்கோவில் புத்தேரி ரயில்வே பாலம் அருகே வெள்ளிக்கிழமை காலை பொதுமக்கள் சிலர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது தண்டவாளத்தில் ஒரு பெண் சடலம் கிடப்பதை பார்த்தனர். இது குறித்து, நாகர்கோவில் ரயில்வே போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். இதில், இறந்தவர், நாகர்கோவில் அருகுவிளையைச் சேர்ந்த பாண்டியராஜ் மனைவி பார்வதி (46) என்பதும், கட்டடத் தொழிலாளியான அவர் வெள்ளிக்கிழமை காலை பணிக்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடந்த போது ரயில் மோதி உயிரிழந்ததும் தெரிய வந்ததாம். இது குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.